மாட்டேறு


      தொல்காப்பியத்தில் குறிக்கப்பெறாது இளம்பூரணரால் தம் உரையில் இணைத்துக்கொள்ளப்பட்ட உத்திவகைகளுள் ‘மாட்டேறு’ என்பதும் ஒன்று. ‘மாட்டெறிதலாவது முன்னொரு பொருள் கூறிப் பின்வருவதும் அதுபோலுமென்றல். அஃதாவது உகர விறுதி அகர வியற்றே என வரும்’ (பொருள். 656, இளம். ப. 235) என்று மாட்டேறு குறித்து விளக்கமளித்துள்ளார் இளம்பூரணர்.
      மனனக்கல்வி முறையைக் கருத்தில்கொண்டு தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்கள் பெரும்பாலும் நுட்பமான, செறிவான நூற்பாக்களைக் கொண்டமைந்துள்ளன. பல இடங்களில் முன் நூற்பாவில் குறிக்கப்பட்ட பொருண்மையைத் தொடர்ந்துவரும் நூற்பாவிலும் குறிக்கவேண்டியிருப்பின் முன் நூற்பாவில் உள்ள தொடர்களை அப்படியே எடுத்தாளாமல் ‘அவைதாம்’, ‘அவற்றுள்’ முதலிய சொற்சீரடிகளைப் பயன்படுத்தி முன் நூற்பாவோடு பின் நூற்பாவைத் தொடர்புபடுத்தியுள்ள பாங்கினைத் தொல்காப்பியத்துள் காணமுடிகிறது. தொல்காப்பிய எழுத்ததிகார முதல் இரு நூற்பாக்களே இந்த அமைப்பிற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.
      நேரடியாக முந்தைய நூற்பாக்களோடு மட்டும் தொடர்புபடுத்தும் இந்த அமைப்பைப் போன்றே மற்றுமொரு அமைப்பையும் தொல்காப்பியத்துள் காணமுடிகிறது. நூற்பா ஒன்றில் கூறப்பட்ட விதி அந்நூற்பாவைத் தொடர்ந்துவரும் நூற்பாவிற்கோ பின்னர் வேறொரு இடத்தில் வரும் நூற்பாவிற்கோ பொருந்துவதாக இருப்பின் முன் நூற்பாவில் சொல்லப்பட்ட விதி மீண்டும் பின்னர் வரும் நூற்பாக்களில் கூறப்படாமல் ‘அன்ன இயற்று’, ‘இயல’, ‘அற்றென மொழிப’ என்பன போன்ற சீர்களால் முன் நூற்பாவோடு இயைபுபடுத்தப்பட்டிருக்கும். இவ்வாறு முன்னர் வந்த விதிகளைச் சொல்லும் நூற்பாவோடு பின்னர் விதி இயைபு கருதித் தொடர்புபடுத்தப்பட்ட நூற்பாக்களையே உரையாசிரியர்கள் மாட்டேறு பெறவந்த நூற்பாக்கள் எனக் குறித்துள்ளனர்.
      தொல்காப்பியர் மாட்டேறு என்பதைத் தனி உத்தியாகக் காட்டவில்லையெனினும் மாட்டேறு பெறுமாறு பல நூற்பாக்களைத் தம் நூலுள் அமைத்துள்ளார். தொல்காப்பியத்துள் ஒரு இயலுக்குள்ளாகவும் இயல்களைக் கடந்தும் நூற்பாக்கள் மாட்டேறு பெற்றுள்ளன. காட்டாக,
      ஒடுமரக் கிளவி யுதிமர இயற்றே.        (எழுத்து. 263, இளம்.)
      சேஎன் மரப்பெயர் ஒடுமர இயற்றே.      (எழுத்து. 279, இளம்.)
      விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும்
      அவைமுப் பெயருஞ் சேமர இயல.       (எழுத்து. 283, இளம்.)
      இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே.     (எழுத்து. 314, இளம்.)
      இந்நூற்பாக்களில் 314 ஆம் நூற்பா 283 ஆம் நூற்பாவோடும், 283 ஆம் நூற்பா 279 ஆம் நூற்பாவோடும், 279 ஆம் நூற்பா 263 ஆம் நூற்பாவோடும், 263 ஆம் நூற்பா ‘உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே’ (எழுத்து. 244, இளம்.) என்ற நூற்பாவோடும் ஒன்றன் முன் ஒன்றாக மாட்டேறு பெற்றுள்ளன.
      மற்றொரு முறையாக ‘அளபெடைப் பெயரே அளபெடை இயல’ என்ற நூற்பா சொல்லதிகாரத்தினுள் நூற்பா எண்கள் 135, 141, 149 என்ற மூன்று இடங்களில் வருகிறது. இந்த மூன்று இடங்களும் ஒருங்கே இவற்றுக்கு முன்னர் அமைந்த ‘அளபெடை மிகூஉம் இகர இறுபெயர் இயற்கைய வாகுஞ் செயற்கைய வென்ப’ (சொல். 125, சேனா.) என்ற நூற்பாவோடு மாட்டேறு பெற்றுள்ளன.
      தொல்காப்பியர் இவ்வாறு மாட்டேறு பெறுமாறு நூற்பாக்களைப் படைத்தது போன்று உரையாசிரியர்களும் மாட்டேறு உத்தியைப் பயன்படுத்திச் சில இடங்களில் உரை வரைந்துள்ளனர்.
      அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே.  (பொருள். 325, இளம்.)
என்ற நூற்பா உரையில் ‘உயிரளபெடை அசையாக நிற்கவும் பெறும் எ-று. உம்மை எதிர்மறையாகலான் ஆகாமை பெரும்பான்மை’ (பொருள். 325, இளம். ப. 90) என்றவாறு உரை எழுதியுள்ளார் இளம்பூரணர். அதாவது, செய்யுளில் உயிரளபெடை வரும்போது தேவைப்படின் அது அசையாகக் கொள்ளப்படும் என்பதே இந்நூற்பாவின் கருத்து. ‘ஆகலும் உரித்தே’ என்பதில் உள்ள உம்மையை எதிர்மறையாகக் கொண்டு அசை ஆகாமையே பெரும்பான்மை எனக் கூறுகிறார் இளம்பூரணர். அதற்கு அடுத்த நூற்பா,
      ஒற்றள பெடுப்பினும் அற்றென மொழிப.  (பொருள். 326, இளம்.)
என்றவாறு அமைந்துள்ளது. இந்நூற்பா உரையில் ‘ஒற்று அளபெடுத்து வரினும் அசைநிலையாகலும் உரித்து எ-று மாட்டேற்று வகையான் ஆகாமை பெரும்பான்மை’ (பொருள். 326, இளம். ப. 91) என்று உரை எழுதி, மாட்டேறு என்னும் உத்தியைப் பயன்படுத்தி ஒற்றளபெடையும் செய்யுளில் அசையாகக் கொள்ளப்படுவது பெரும்பான்மை இல்லை என்ற பொருளை வருவித்துக் கொண்டுள்ளார் இளம்பூரணர்.
      எடுத்துக்காட்டுகளை மாட்டேற்றால் கொண்டுவந்து இணைத்துள்ள இடங்களும் இளம்பூரணர் உரையில் அமைந்துள்ளன.
      மூன்றன் ஒற்றே வந்த தொக்கும்.  (எழுத்து. 447, இளம்.)
எழுத்ததிகார குற்றியலுகரப் புணரியல் பகுதியுள் இடம்பெற்றுள்ள இந்நூற்பா மூன்று என்னும் எண்ணுப் பெயருக்கான புணர்ச்சி விதி ஒன்றைக் கூறுகிறது. இதனைத் தொடர்ந்த அடுத்த நூற்பா ஐந்து என்னும் எண்ணுப் பெயர்பற்றியதாக உள்ளது. நான்கு என்னும் எண்ணுப் பெயருக்கான விதியைக் கூறும் நூற்பா தொல்காப்பியரால் அமைக்கப்படவில்லை. காரணம் நான்கு என்னும் எண்ணுப்பெயருக்கும் மூன்று என்னும் எண்ணுப்பெயருக்கும் விதி ஒன்று என்பதே. இதை நன்றாக உள்வாங்கிக்கொண்ட இளம்பூரணர், மேற்கண்ட நூற்பா உரையில் ‘மூன்றன் ஒற்று வந்தது ஒக்கும் - மூன்றாம் எண்ணின்கண் நின்ற னகார ஒற்று வருமொழியாய் வந்த அளவுப்பெயர் நிறைப்பெயரின் முதலில் வந்த ஒற்றோடு ஒத்த ஒற்றாய் முடியும் எ-று. எ-டு முக்கலம், சாடி, தூதை, பானை எனவும் முக்கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். மாட்டேற்றானே நாற்கலம், சாடி, தூதை, பானை எனவும் நாற்கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும்’ (எழுத்து. 447, இளம். பக். 258, 259) என்றவாறு மாட்டேற்றால் நான்கு என்னும் எண்ணிற்குரிய எடுத்துக்காட்டுகளையும் இந்நூற்பா உரையிலேயே எடுத்துக்காட்டியுள்ளார்.
      தொல்காப்பியச் செய்யுளியல் முதல் நூற்பாவில் குறிக்கப்பெற்றுள்ள செய்யுள் உறுப்புகளுள் ஒன்றான ‘மாட்டு’ என்பதும் இம்மாட்டேறு என்னும் உத்தியோடு ஒப்பவைத்து எண்ணத்தக்கதாய் உள்ளது.

புறநானூறுத் திணை, துறைகள்: உழிஞைத் திணையை முன்னிறுத்தி ஒரு குறிப்பு



தமிழ் இலக்கிய மரபின் தொடக்கப் புள்ளியாகப் பாட்டும் தொகையும் என அமைந்த சங்கச் செவ்வியல் பாடல்களின் தொகுப்பு விளங்குகிறது. தனிநிலைச் செய்யுள்களாகப் புலவர்கள் பலரால் பாடப்பட்ட சங்கப் பாடல்கள் பொருண்மை, அடியளவு, பாவகை என்ற அளவைகளின்வழிப் பகுக்கப்பட்டு எட்டுத் தொகை என்றும் பத்துப்பாட்டு என்றும் தொகுக்கப்பட்டன. சங்கப் பாடல்கள் தொகைகளாகத் தொகுக்கப்பட்ட காலத்தில்தான் அவைகளுக்கான திணை, துறை, கூற்று, பாடினோர், பாடப்பட்டோர் முதலிய விளக்கங்கள் குறிக்கப்பட்டன. தொகுப்பு காலத்தில் குறிக்கப்பட்ட இவ்விளக்கங்களின் பாற்பட்டும் அதனைவிட்டு விலகாமலுமே சங்கத் தொகை நூல்களுக்கு எழுந்த உரைகளும் அமைந்துள்ளன. எனினும் தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் அகத்திணையியலுக்கும் புறத்திணையியலுக்கும் உரை எழுதியுள்ள உரையாசிரியர்கள், அகத்திணைகளையையும் புறத்திணைகளையையும் விளக்குமிடத்து அவைகளுக்கு உதாரணமாகச் சில சங்கப் பாடல்களை எடுத்துக்காட்டியுள்ளனர். தொல்காப்பிய உரையில் குறிப்பிட்ட ஒரு திணைக்கு உரியதாகக் காட்டப்படும் ஒரு பாடல், சங்கத் தொகுப்பில் வேறு திணைக்கு உரியதாகக் குறிக்கப்பட்டிருக்கும். குறிப்பாகப் புறநானூற்றுத் தொகுப்பில் உழிஞைத் திணைக்கு உரியதாக எந்த ஒரு பாடலும் இடம்பெறவில்லை. ஆனால் தொல்காப்பியப் புறத்திணையியல் உரையில், உழிஞைத் திணையை விளக்குமிடத்து அத்திணைக்கு உரியனவாகப் பன்னிரண்டு புறநானூற்றுப் பாடல்கள் உரையாசிரியர்களால் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. (இளம்பூரணர் தனியே நான்கு பாடல்கள், நச்சினார்க்கினியர் தனியே ஐந்து பாடல்கள், இருவரும் பொதுவாக மூன்று பாடல்கள்) தொல்காப்பிய உரைகளில் உழிஞைத் திணைக்கு உரியனவாகக் காட்டப்பட்ட இப்புறநானூற்றுப் பாடல்களின் அடிப்படையில் புறநானூற்றுத் திணை, துறை விளக்கங்களைப்பற்றி சில குறிப்புகளை முன்வைக்கிறது இக்கட்டுரை.

புறநானூறு: தொகுப்பு, உரை, மேற்கோள்

சங்கத் தொகை நூல்களுள் காலத்தால் மிகவும் பழமையான பாடல்களக் கொண்ட நூலாகப் புறநானூறு விளங்குகிறது. கி.மு. 300 முதல் கி.பி. 250 வரையிலான காலப்பரப்பில் தோன்றிய இப்பாடல்கள் ஏறக்குறைய கி.பி. 5 அல்லது கி.பி. 6 ஆம் நூற்றாண்டளவில் தொகுக்கப் பட்டிருக்கும் என்பது பொதுவான கருத்து. இதனைத் தொகுத்தவர், தொகுப்பித்தவர் யார் என்பது தெரியவில்லை. இந்த நூலக்குப் பெயர் அறியப்படாத பழைய உரை ஒன்றும் கிடத்துள்ளது (266 பாடல் வரை மட்டும்). எளிய நடையில் அமந்த இவ்வுரை தொகுப்பு காலத்தில் குறிக்கப்பெற்ற திணை, துறை விளக்கங்களின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. தொல்காப்பியத்திற்கு உரை செய்த இளம்பூரணர், நச்சினார்க்கினியர் இருவரும் புறத்திணையியலில் மட்டும் ஏறக்குறைய 80 இடங்களில் புறநானூற்றுப் பாடல்களை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். இவற்றுள் ‘வஞ்சினக் காஞ்சி’ உள்ளிட்ட ஒரு சில துறைகள் தவிர ஏனைய துறைகளுக்கு மேற்கோள்களாக எடுத்துக்காட்டிய பாடல்கள் புறநானூற்றுத் தொகுப்பில் வேறு திணை, துறைகளுக்கு உரியனவாகக் குறிக்கப்பட்டுள்ளன.

ஒரு பாடல் இரு திணைகள்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியதாக அமந்த புறநானூறு 36 ஆம் பாடல், தொல்காப்பிய உரையினுள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் இருவராலும் உழிஞைத் திணையின் உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு என்னும் பகுதியை விளக்க மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.

இப்பாடலில் சோழ மன்னன் கருவூரை முற்றுகையிட்டிருந்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. இதன்வழி இப்பாடலை இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் உழிஞைத் திணையாகக் கொண்டுள்ளனர். ‘அவன் (சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்) கருவூரை முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடியது.’ என்றவாறு பாடலின்கீழ் அமைந்துள்ள பாடினோர் பாடப்பட்டோர் விளக்கத்தில் உள்ள ‘முற்றியிருந்தானை’ என்ற குறிப்பும் இதனை உருதிப்படுத்துகிறது.

புறநூனூற்றுத் தொகுப்பில் இப்பாடலின் திணை வஞ்சி என்றும் துறை துணை வஞ்சி என்றும் குறிக்கப்பட்டுள்ளது. ‘மேற்சென்றானைச் சந்து செய்து மீட்டலின் இது துணை வஞ்சி யாயிற்று’ (புறம். 36, உரை) என்றவாறு புறநானூற்றின் பழைய உரை இப்பாடல் துணை வஞ்சி துறையில் அமைக்கப்பட்டதற்கான கரணத்தை விளக்குகிறது. துணை வஞ்சி என்னும் துறையை வஞ்சித் திணையின் துறைகளுள் ஒன்றாகத் தொல்காப்பியமோ, புறப்பொருள் வெண்பாமாலையோ குறிக்கவில்லை. இளம்பூரணரே துணை வஞ்சியை, வஞ்சித் திணைக்கு உரிய துறைகளுள் ஒன்றாக இணைத்துள்ளார். எனினும் துணை வஞ்சி என்னும் துறைக்கு இளம்பூரணர் தரும் விளக்கம் இப்பாடலின் கருத்திற்குப் பொருந்தி வருவதாகத் தெரியவில்லை. இளம்பூரணரின் விளக்கம் தவிர்த்த வேறு மூலங்களில் இத்துறைபற்றிய விளக்கங்கள் கிடைக்காததால் இப்பாடல் துணை வஞ்சி என்னும் துறைக்குரிய இலக்கணத்துடன் பொருந்தி வந்துள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

பிற பாடல்கள்

மேற்சொன்னவை போக புறநானூற்றின் 37, 44, 77 ஆம் பாடல்கள் இளம்பூரணரால் உழிஞைத் திணையாகக் குறிக்கப்பட்டுள்ளன. ஆனால் புறநானூற்றுத் தொகுப்பில் இம்மூன்று பாடல்களும் வாகைத் திணை - அரச வாகை துறை என்பதாகக் குறிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 77 ஆம் பாடலில்

குடுமி களைந்தநுதல் வேம்பி னொண்டளிர்
நெடுங்கொடி யுழிஞை பவரொடு மிலைந்து . . . (புறம். 77: 2, 3)

என்ற அடிகள் - தலையில் வேம்பின் தளிரை உழிஞையொடு இணைத்து அணிந்து - என்னும் பொருள்பட அமைந்துள்ளன. இக்குறிப்பும் இதனை உழிஞைத் திணையாகக் கொள்வதற்கு அரணாகின்றது. 271 ஆம் பாடலும் இளம்பூரணரால் உழிஞைத் திணைக்கு உரியதாகக் காட்டப்பட்டுள்ளது., புறநானூற்றில் அது நொச்சித் திணை - செருவிடை வீழ்தல் துறை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

புறநானூற்றின் 42 ஆம் பாடலும் 109 ஆம் பாடலும் இளம்பூரணர், நச்சினார்க்கினியர் இருவராலும் உழிஞைத் திணைக்கு உரியனவாக எடுத்துக்காட்டப் பட்டுள்ளன. ஆனால் புறநானூற்றில் இவை முறையே வாகை - அரச வாகை என்றும் நொச்சி - மகண் மறுத்தல் என்றும் குறிக்கப்பட்டுள்ளன.

நச்சினார்க்கினியர், புறநானூற்றின் 203, 272, 284, 305, 332 ஆகிய பாடல்களை உழிஞைத் திணைக்கு உரியனவாகக் காட்டியுள்ளார். ஆனால் புறநானூற்றில் இவை முறையே பாடாண்டிணை - பரிசிற்றுறை என்றும் நொச்சி - செருவிடை வீழ்தல் என்றும் தும்பை - பாடாண் பாட்டு என்றும் வாகை - பார்ப்பன வாகை என்றும் வாகை - மூதின் முல்லை என்றும் குறிக்கப்பட்டுள்ளன.

திணை துறை விளக்கங்கள் மூடிய சட்டங்கள் அல்ல

சங்கப் பாடல்களுக்குக் குறிக்கப்பட்டுள்ள திணை, துறை விளக்கங்கள் எந்தப் பின்புலத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளன என்பதுபற்றி ஒரு தெளிவான முடிவுக்கு வரமுடியவில்லை. கைக்கிளை, பெறுந்திணை ஆகிய இரண்டு திணைகளும் அகப்பொருளுக்கு உரியனவாகத் தொல்காப்பியரால் சுட்டப்பட்டுள்ளன. இதற்கிணங்க இத்திணையில் அமைந்த பாடல்கள் சில கலித்தொகையில் இடம்பெற்றுள்ளள்ளன. அதே வேளையில் இவற்றைப் புறப்பொருள் திணைகளாகப் புறப்பொருள் வெண்பாமாலை வகைப்படுத்தியுள்ளது. அதற்குத் தகுந்தாற்போல் கைக்கிளையும் பெறுந்திணையும் புறநானூற்றில் புறப்பொருள் திணைகளாகவே குறிக்கப்பட்டுள்ளன. மற்றொன்று புறநானூற்றில் குறிக்கப்பட்ட துணை வஞ்சி என்னும் துறை தொல்காப்பியத்திலோ புறப்பொருள் வெண்பாமாலையிலோ இடம்பெறவில்லை.

சங்கப் பாடல்களுக்குத் திணை, துறை முதலியவற்றை வகுத்தோர் அவற்றைத் தொல்காப்பியத் திணை வகைப்பாட்டிலிருந்து மேலும் விரிவுபடுத்தி வகைப்படுத்த முற்பட்டுள்ளமை மேற்கண்ட இடங்களின்வழிப் புலனாகிறது. சங்கப் பாடல்களுக்குத் திணை, துறை வகுக்கப்பட்ட காலத்தில் திணை, துறை வகைப்பாட்டுச் சிந்தனையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இம்மாற்றம் அல்லது விரிவு ஏற்படுத்திய தாக்கங்களை இத்தொகுப்பு முயற்சிகளுக்குப்பின் தோற்றம்பெற்ற நம்பி அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை உள்ளிட்ட பொருள் இலக்கண நூல்களுள் காணமுடிகிறது. திணை, துறை விளக்கங்கள் குறிக்கப்பட்ட காலத்தில் தமிழ் புலமை உலகில் உருவாகியிருந்த திணை, துறை சார்ந்த சிந்தனை மரபு என்பது தொல்காப்பியத்திற்கும் அதன் பின்னர் தோன்றிய பொருள் இலக்கணங்களுக்கும் ஒரு பாலமாக அமைந்திருந்தது எனச் சொல்வதும் பொருந்தும்.

சங்கப் பாடல்களின் பழமையைக் கருத்தில்கொண்டு அவற்றிற்குத் தொல்காப்பிய இலக்கணத்திலிருந்து விலகுவதாகத் திணை, துறை வகுத்தது பொருந்தாது என்னும் கருத்தும் முன்வைக்கப்பட்டது. நச்சினார்க்கினியர் முதலில் இவ்விவாதத்தைத் துவக்கி வத்தார். ‘தத்தம் புது நூல் வழிகளால் புறநானூற்றுக்குத் துறை கூறினாரேனும் அகத்தியமும் தொல்காப்பியமுமே தொகைகளுக்கு நூலகலின் அவர் சூத்திரப் பொருளாகத் துறை கூறவேண்டு மென்றறிக’ (தொல். பொருள். 90, ந்ச்சர். ப. 411) என்றவாறு தொல்காப்பியப் புறத்திணையியலில் அவர் எழுதியுள்ள உரை, தொல்காப்பியமே புறநானூற்றிக்கு உரிய இலக்கணம் என்பதை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை உள்ளிட்டவை தொல்காப்பியக் கருத்திற்கிணங்க தனிநிலை போர்கள் என்றும் மாறாகப் புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுவதற்கு இணங்க ஒரே போரின் வெவ்வேறு நிலைகள் அல்ல என்றும் தக்க காரணங்கள் காட்டி, புறப்பொருள் வெண்பாமலையின் திணைக் கோட்பாடு புறநானூற்றிற்குப் பொருந்தாது என்று விளக்கியுள்ளார் தமிழண்ணல் (2009: 137-139). நச்சினார்க்கினியர் முதலானோர் சங்கப் பாடல்களுக்குத் தொல்காப்பியத்தையே இலக்கணமாகக் கொள்கின்றனர். இந்நிலையில் தொல்காப்பியத்திலிருந்து விலகிச் சங்கப் பாடல்களுக்கு வரயறுக்கப்பட்ட திணை, துறைகளது பொருத்தப்பாட்டின்மீது கேள்வி எழுகிறது.

சங்கப் பாடல்களுக்குத் தொகுப்பு காலத்தில் குறிக்கப்பட்ட திணை, துறை விளக்கங்கள் அக்காலகட்டத்தில் தமிழ் புலமை உலகில் நிலவிவந்த இலக்கிய வாசிப்பு முறையினை விளக்குவதாகக் கொள்ளமுடியும். பொது நிலையில் ஒரு இலக்கியப் படைப்பு என்பது அதனை அணுகுபவரின் மன நிலைக்கும் அறிவு நிலைக்கும் எற்ப பொருள்படும் தன்மையைக் கொண்டது. இந்த அடிப்படையில், சங்கப் பாடல்களுக்கு வழங்கப்பட்ட திணை, துறை விளக்கங்களைத் திணை, துறை குறிக்கப்பட்ட காலத்தில் நிலவிவந்த புலமை நிலைக்கும் வாசிப்பு முறைக்கும் ஏற்ப அமைக்கப்பட்டுள்ளவையாக கொள்ளமுடியும்.

சங்கத் தொகை நூல்களில் குறிப்பாகப் புறநானூற்றில் சில பாடல்களுக்குத் திணைகளும் சில பாடல்களுக்குத் துறைகளும் சிலவற்றிற்கு இரண்டும் எழுதப்பட்டிருக்கவில்லை. சில பாடல்களுக்கு இரண்டு துறைகள் குறிக்கப்பட்டுள்ளன. இவை, குறிப்பிட்ட ஒரு பாடலுக்கு குறிக்கப்பெற்ற திணை, துறை விளக்கங்கள் முடிந்த முடிபல்ல என்பதையும் திணை, துறை விளக்கங்கள் குறிப்பிட்ட அந்த பாடல் வெளிப்படுத்தும் பொருளின் ஒரு பரிமாணம் மட்டுமே என்பதையும் விளக்கிநிற்கின்றன.

திணை, துறை, கூற்று விளக்கங்கள் சங்கப் பாடல்களை அணுகுவதற்கு மிக மிக இன்றியமையாதவையே. இவ்விளக்கங்கள் இல்லையேல் சில சங்கப் பாடல்கள் ஒரு சிறிதும் விளங்குவதில்லை. அதே வேளையில் திணை, துறை விளக்கங்கள் அப்பாடல்கள் வெளிப்படுத்தும் பொருள்களைக் கட்டுப்படுத்துவதும் இல்லை. திணை, துறை விளக்கங்களைத் தாண்டியும் சங்கப் பாடல் ஒன்றிற்கு வேறு பொருளைக் கற்பிக்க முடியும். குறிப்பாகப் புறநானூற்றின் திணை, துறை விளக்கங்களுக்கு இக்கருத்து மிகவும் பொருந்தும்.

ஈரான் - ஒரு நேரடி அனுபவம்

விடியல் பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்த மர்ஜானே சத்ரபியின் ஈரான்-ஒரு குழந்தைப் பருவத்தின் கதை, ஈரான்-திரும்பும் காலம்
வரைபடப் புனைவு (மொழிபெயர்ப்பு) நூல் குறித்த அறிமுகம்

1895-வாக்கில் தனக்குரிய தனித்த வடிவத்தைப் பெற்றுவிட்ட சித்திரக்கதை விரைவில் பரவலான வாசகர்களையும் பெற்றுவிட்டது. இவ்வரவேற்பை ஒட்டி 1950-களில் தமிழ்ச் சூழலிலும் சித்திரக்கதை வெளியீட்டு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. புராணக் கதைகள், சாகசக் காட்சிகள் நிறைந்த வீரதீரக்கதைகள், மர்மக் கதைகள், துப்பறியும் கதைகள் என்ற தன்மையிலேயே பெரும்பாலும் அவை அமைந்திருந்தன. இருப்பினும் தற்பொழுது மேலைநாடுகளில் வளர்ச்சிபெற்றுவரும் வடிவமாகத் திகழும் வரைபடப் புனைவு (Graphics novel) என்பதற்கு இணையான எந்தவொரு ஆக்கமும் இதுவரைத் தமிழ்ச்சூழலில் தோற்றம்பெறவில்லை.  மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட ஓரிரு முயற்சிகளே நடந்துள்ளன.

வரைபடப் புனைவைப் பொறுத்தமட்டில் தமிழில் செய்யப்பட்ட குறிப்பிடத்தகுந்த மொழிபெயர்ப்புகளுள் எஸ். பாலச்சந்திரனால் ஆங்கிலத்தின்வழி தமிழுக்குக் கொண்டுவரப்பட்ட ஈரான்-ஒரு குழந்தைப் பருவத்தின் கதை, ஈரான்-திரும்பும் காலம் என இரு தொகுதிகளாக வெளிவந்த, மர்ஜானே சத்ரபியின் வரைபடப் புனைவும் ஒன்று. தமிழில் செய்யப்பட்ட நல்ல முயற்சியான இது விடியல் பதிப்பகத்தின் வாயிலாக 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுப் பரவலாக அறியப்படாமல் இருக்கும் சிறந்த படைப்புகளுள் ஒன்றாக இவ்வரைபடப் புனைவும் அமைந்துவிட்டது துரதிஷ்டவசமானது.

1969-இல் ஈரானில் பிறந்து, அங்கும் தொடர்ந்து வியன்னாவிலும் தனது பள்ளிப்படிப்பை முடித்த மர்ஜானே, பின்னர் பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ் போர்க் நகரில் உள்ள ஓவியக் கலைக்கல்லூரியில் சேர்ந்து படித்தார். முற்போக்கான சிந்தனையைக் கொண்ட குடும்பப் பின்னணியிலிருந்து வந்த மர்ஜானே, தனது பள்ளிப் பருவம்முதல்
உயர் கல்வி பயில்வதற்காகப் பிரான்ஸ் செல்லும் காலம் வரையிலுமான ன் சொந்த அனுபவங்களையே இவ்வரைபடப் புனைவாக வடித்திருக்கிறார்.
இஸ்லாமியப் புரட்சி, ஈராக் - ஈரான் இடையேயான போர், மத அடிப்படைவாதம், பெண்கள்மீதான மதம் சார்ந்த ஒடுக்குமுறை எனப் பலவும் மர்ஜானே வாழ்வில் நிகழ்த்திய தாக்கங்களும் அத்தாக்கங்களுக்கு எதிரான அவரது எதிர்வினைகளுமே ப்படைப்பின் கருப்பொருளாகியுள்ளன. ஈரானில் மர்ஜானேவுக்குக் கிடத்த பள்ளி பருவ அனுபவங்கள் (ஈரான் ஒரு குழந்தைப் பருவத்தின் கதை) முதல் தொகுதியாகவும், பின்னர் பள்ளிப் படிப்பைத் தொடர்வதற்காக ஆஸ்திரியாவிலுல்ள வியன்னாவுக்குச் சென்றதுமுதல் மீண்டும் ஈரான் திரும்பும்வரையிலான அனுபவங்கள் (ஈரான்-திரும்பும் காலம்) இரண்டாம் தொகுதியாகவும் அமைக்கப்பட்டுள்ளன. சிறந்த குழந்தைகள் இலக்கியப் படைப்பளியான மர்ஜானேயின் படைப்பாளுமை முதல் தொகுதியிலும், அவரது பெண்ணிய தத்துவார்த்தப் பின்புலம் இரண்டாம் தொகுதியிலும் என இரு வகையில் அவை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆசிரியரின் மன உணர்வுகளை அப்பட்டமாக வெளிப்படுத்தும் தன்மையில் படங்கள் அமைந்திருப்பதற்கும், படங்களுக்கும் புனைவுக்கும் இடையே இழையோடும் பொருத்தப்பாட்டிற்கும் காரனம் தேர்ந்த ஓவியரான ஆசிரியரே ப்படைப்புக்கான வரைபடங்களை வரைந்துள்ளமைதான். வரைபடப் புனைவைப் பொறுத்தமட்டில் ஆசிரியரே ஓவியராகவும் இருப்பதில் கிடைக்கும் வசதிகளில் இதுவும் ஒன்று.
பொதுவான வாசகர் ஒருவரின் மூளையில் படிந்திருக்கும் ஈரான்பற்றிய முன்கற்பிதங்களுக்கும் மர்ஜானே காட்ட முயலும் ஈரானுக்கும் கணிசமான வித்தியாசங்கள் இருப்பதை இப்படைப்பை வாசிக்கும் ஒவ்வொருவரும் உணர முடியும்.
கதைச்சூழலுக்கு ஏற்ற அவரது எடுத்துரைப்பு மொழியும் தேர்ந்த படங்களும் இணைந்து இப்படைப்பைச உலகின் சிறந்த வரைபடப் புனைவுகளுள் ஒன்றாக இடம்பெறச்செய்துள்ளன.
சிறந்த படைப்பொன்றிற்கு வாய்க்கும் நல்ல மொழிபெயர்ப்பு, மூலத்திற்கு இணையான தாக்கத்தை, மொழிபெயர்ப்பை வாசிக்கும் வாசகர்களிடத்திலும் ஏற்படுத்திவிடும் என்பதற்கு இம்மொழிபெயர்ப்பும் ஒரு நல்ல சான்று.